↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இங்கிலாந்து அணி விளையாடும் விதம் அந்த நாட்டு ரசிகர்களையும், ஊடகங்களையும் ரொம்பவே கடுப்பாக்கி விட்டது போலும். சகட்டு மேனிக்கு இங்கிலாந்து அணியை கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டுள்ளனர். உலகக் கோப்பையில் நான்கு போட்டிகளில் மோதியுள்ள இங்கிலாந்து அணி அதில் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. அதிலும் நியூசிலாந்து மற்றும் இலங்கையிடம் அது பெற்ற தோல்வி ரொம்பவே கேவலமானது. இதுதான் ரசிகர்களை கடுப்பாக்கி விட்டது.

இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள், இலங்கை அணியை முடக்க முடியாமல் தடுமாறியது ரசிகர்களை ரொம்பவே டென்ஷனாக்கி விட்டது. நீங்க எடுத்த ரன்களை வைத்துக் கூட உங்களைக் காப்பாத்திக்க முடியாமல் போயிருச்சே என்று இங்கிலாந்து அணிக்கு கடும் கண்டனங்கள் குவிந்து கொண்டுள்ளன. வெல்லிங்டனில் நடந்த போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக பேட் செய்திருந்தது. ஆனால் பவுலர்கள் கவிழ்த்து விட்டு விட்டனர். இதனால் மிகப் பெரிய ஸ்கோரை இலங்கை அழகாக சேஸ் செய்து வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

டெய்லி மெயில் செய்தியில், மிகப் பெரிய ஸ்கோரை எடுத்தும் கூட இங்கிலாந்து வீரர்களால் வெல்ல முடியாமல் போனது அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இன்றைய நவீன ஒரு நாள் கிரிக்கெட்டில் கத்துக்குட்டிகள் போல காணப்படுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள் என்று டெய்லி மெயில் கழுவி ஊற்றியுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்துடன் தோல்வி, ஸ்காட்லாந்துடன் வெற்றி எல்லாம் எதிர்பார்த்தவைதான். ஆனால் இலங்கையிடம் தோல்வி என்பது.. ஸாரி இங்கிலாந்து. இங்கிலாந்துக்கும், உலகக் கோப்பைக்கும் வெகு தூரம் உள்ளது என்பதையே இது காட்டுகிறது. கடைசி எட்டுக்கு இங்கிலாந்து முன்னேறுமா என்பதே கேள்விக்குறிதான் என்று பிபிசி கூறியுள்ளது.

முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் கூறுகையில், ஒரு வேளை இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறினாலும் கூட அரை இறுதிக்கு அது வருவது நிச்சயம் சிரமமானது. வெற்றி பெறும் வகையில் அவர்கள் விளையாடவில்லை என்றார்.

டிவிட்டரில் ரசிகர்கள் தாறாமாறாக கிழித்து தோரணம் கட்டி வருகின்றனர். ஒருவர் டிவிட்டரில் இப்படிப் போட்டுள்ளார். அடுத்த பிளைட்டைப் பிடித்து ஊருக்குத் திரும்புங்கள். விளையாடியது போதும். வெல்லிங்டனிலிருந்து லண்டன் திரும்ப குறைந்த கட்டணமே செலவாகும் என்று கூறியுள்ளார்.

இன்னொருவரோ, ஞாயிற்றுக்கிழமை லீக்கில் விளையாடும் குட்டி அணி கூட சிறப்பாக ஆடுகிறது. ஆனால் குப்பையாக ஆடுகிறார்கள் இவர்கள் என்று கடுப்பாக கூறியுள்ளார்.

ஆனால் இங்கிலாந்து இதற்கு முன்பும் கூட 9 ஒரு நாள் போட்டிகளில் 300க்கும் மேல் ஸ்கோர் செய்தும் கூட தோல்வியுற்றுள்ளதாக புள்ளி விவரக் கணக்கை சிலர் காட்டி சமாளிக்கிறார்கள்.


அடுத்து இங்கிலாந்து அணி, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியோருடன் மோதவுள்ளது. ஆனால் இதிலும் அது வெல்லுமா அல்லது தட்டுத் தடுமாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top