↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

"சிங்கிள் டீக்கு" அலைந்தவர்கள்தானே என்ற ரேஞ்சுக்கு இந்தியாவைக் கேலி செய்தாலும் கூட மறுபக்கம், இந்தியாவை நினைத்து உள்ளூர பயங்கரமாக கில் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா என்ற செய்திகள் இந்தியர்களின் காதுகளில் தேன் போல பாயத் தொடங்கியுள்ளது. காரணம், இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெறப் போகும் சிட்னி மைதானம். சிட்னி மைதானம் ஸ்பின்னர்களுக்கு செமையாக கை கொடுக்கும். வேகப் பந்து வீச்சுக்கு சுத்தமாக உதவாது. இதனால் ஆஸ்திரேலியாவின் வேகப் புயல்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனராம்.

பிட்ச்சை வேகத்திற்கு சற்று சாதகமாக மாற்றுமாறு சிட்னி மைதான கியூரேட்டர் டாம் பார்க்கரிடம் கேட்டுப் பார்த்தும் அவர் முடியாது என்று கூறி விட்டாராம். இதனால் ஆஸ்திரேலிய அணியினர் செம அப்செட் என்கிறார்கள். பொதுவாக ஆஸ்திரேலிய பிட்ச்சுக்கள் வேகப் பந்து வீச்சுக்கு ஏற்றவையாகும். நன்றாக பவுன்ஸ் ஆகும் வகையில் பிட்ச் வடிவமைக்கப்படும். ஆனால் சிட்னி மைதான பிட்ச், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. இதுதான் இந்திய ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம், ஆஸ்திரேலியர்கள் ஸ்பின் பவுலிங் என்றாலே தொடை நடுங்குவார்கள் என்பதால்.

அடிலைட் பிட்ச்சை எடுத்துக் கொண்டால் அங்கு எந்த அணியாக இருந்தாலும் சரி, நல்ல வேகப் பந்து வீச்சாளரை வைத்திருந்தால் பிரமாதப்படுத்தலாம். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போட்டியே அதற்கு சரியான உதாரணம். காலையில் மிட்சல் ஸ்டார்க் வெளுத்தார் என்றால் மறுபதியில் பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் புயலைக் கிளப்பிரனார். 


ஆனால் சிட்னியில் நிலைமையே வேறு. இந்தியாவைப் போல ஆஸ்திரேலியாவிடம் பிரமாதமான ஸ்பின்னர்கள் இல்லை. வேகப் பந்து வீச்சை மட்டுமே அவர்கள் நம்பிக் களம் கண்டு வருகின்றனர். ஆனால் அதை வைத்து சிட்னியில் காலம் தள்ளுவது மிக மிக கடினம். இதைத்தான் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கும் கூட சிட்னியில் ஸ்பின்னர்களை வைத்து இந்தியா சாதிக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இந்தியாவிடம் தற்போது அஸ்வின், ரவீந்திர ஜடேஜா என இரு அருமையான ஸ்பின்னர்கள் உள்ளனர். இருவரும் நல்ல பார்மிலும் உள்ளனர். அதேசமயம், ஆஸ்திரேலியாவிடம் ஸ்பின் அந்த அளவுக்கு சவுகரியமாக இல்லை. சிட்னி மைதானத்தில் ஹர்பஜன் சிங் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட இந்தியாவுக்கு ஏற்ற பிட்ச் இது என்பதால், நன்கு அடித்து ஆடவும் முடியும். எனவே இந்தியா முதலில் பேட் செய்தால் பெரிய ஸ்கோரை குவிக்க வாய்ப்புள்ளது. அதேபோல பந்து வீச்சிலும் ஸ்பின்னர்களை வைத்து ஆஸ்திரேலியாவை முடக்க நிறைய வாய்ப்புள்ளது.

சிட்னி மைதானம் இப்படி திகழ டாம் பார்க்கரே காரணம். இவர்தான் கடந்த 18 வருடமாக இங்கு கியூரேட்டராக இருக்கிறார். சிட்னி பிட்ச்சை தனது செல்லக் குழந்தை என்று கூறுபவர் பார்க்கர். அதை யாரும் வந்து பாழ்படுத்தவோ, மாற்றவோ அனுமதிக்க மாட்டேன் என்றும் கண்டிப்பாக கூறி வருபவர் பார்க்கர்.


இதுகுறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸல்வுட் கூறுகையில், அவர் (பார்க்கர்) எங்களுக்கு எந்த உதவியையும் இதுவரை செய்ததில்லை. இப்போதாவது செய்தால் நன்றாக இருக்கும். கொஞ்சம் புல் இருந்தால் கூட போதும். நாங்கள் விக்கெட் எடுக்க உதவும். டெஸ்ட் போட்டியிலும் எங்களுக்கு அவர் உதவவில்லை. இப்போது இந்தியாவிடம் நல்ல ஸ்பின்னர்கள் உள்ள நிலையில், இது எங்களுக்குப் பாதகமாகவே அமையும் என்றார் அவர். 

பிட்ச் சரியில்லை என்று இப்போதே ஆஸ்திரேலியர்கள் சொல்ல ஆரம்பித்திருப்பதைப் பார்த்தால் லேசாக பயம் வந்து விட்டது உண்மைதான் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top