↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நாட்டின் 66ஆவது குடியரசுத் தினத்தினை முன்னிட்டு தமிழக சிறைத்துறை முன்னாள் கைதிகளில் திருந்தி வாழ்பவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வழக்கம் போல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
ஆனால் தமிழக சிறைத் துறையினர், குடியரசு தினவிழாவை நேற்று வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள்.

சிறைத்துறை இயக்குனர் திரிபாதி உத்தரவின் பேரில் இந்த வித்தியாசமான விழா நேற்று தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் நடந்தது.
பல்வேறு குற்றங்களை செய்துவிட்டு தண்டனை பெற்று சிறைகளில் வாழ்ந்து, பின்னர் விடுதலையாகி வெளியில் சென்று, சிறைகளில் கற்ற தொழிலை செய்து சம்பாதித்து, குடும்பத்துடன் சந்தோஷமாக வாழும் கைதிகள் 54 பேரை தெரிவு செய்து இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த 54 பேரில் 4 பெண்களும் அடக்கம். சென்னை புழல் சிறைக்கு திருந்தி வாழ்ந்த ஆண்கள் 13 பேரையும், 2 பெண்களையும் வரவழைத்து பாராட்டு விழா நடத்தப்பட்டது.

டி.ஐ.ஜி.க்கள் மவுரியா, ராஜேந்திரன், சூப்பிரண்டு அன்பழகன் ஆகியோர் திருந்தியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். சிறையில் தற்போது தண்டனை அனுபவிக்கும் மற்ற கைதிகள் முன்னிலையில் இந்த விழா நடத்தப்பட்டது.

தாங்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை திருந்தி வாழும் நபர்கள், தண்டனை அனுபவிக்கும் கைதிகளிடம் பகிர்ந்து கொண்டனர். தண்டனை அனுபவிக்கும் கைதிகள் நாங்களும் திருந்தி வாழ்வோம் என்று அப்போது சபதம் எடுத்துக் கொண்டனர்.
இந்த விழா ஒரு முன்மாதிரி விழா மட்டும் அல்லாமல், கைதிகள் மத்தியில் ஒரு நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என்று புழல் சிறை அதிகாரிகள் பெருமிதப்பட்டனர்.

வேலூர் மத்திய சிறையில் டி.ஐ.ஜி முகமது அனீபா தலைமையில் திருந்திய நபர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதுபோல கடலூர், கோவை, சேலம், மதுரை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை மத்திய சிறைகளிலும் இந்த நெகிழ்ச்சியான விழா நடந்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top