'லிங்கா' இழப்பீடு தொடர்பாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ஈராஸ் நிறுவனத்துடன் வெள்ளிக்கிழமை காலை பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
'லிங்கா' தயாரிப்பாளர் தரப்பில் இருந்து நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு என்பது குறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முடிவு செய்ய இருந்தார்.

ஆனால், 'லிங்கா' இழப்பு கணக்கு வழக்குகளை பார்த்த தயாரிப்பாளர் "இவ்வளவு நஷ்டமா... என்னால் மட்டுமே இதனை ஈடுகட்ட முடியாது" என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதேவேளையில், "இப்படத்தை என்னிடம் வாங்கிய ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ஈராஸ் நிறுவனத்திற்கு சென்றிருக்கிறார்.

கார்ப்பரெட் நிறுவனம் என்பதால் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஈராஸ் நிறுவனத்துடன் முதலில் நேற்றிரவு மும்பையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலையும் இப்பேச்சுவார்த்தை தொடர்ந்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து பெங்களூர் திரும்பும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் யாருக்கு எவ்வளவு நஷ்ட ஈடு என்பதை முடிவு செய்கிறார்.

இந்நிலையில், இன்று பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றி வரும் திருப்பூர் சுப்பிரமணியம் ஹாங்காங் செல்ல இருக்கிறார். ஹாங்காங்கில் இருந்து பிப்ரவரி 5-ஆம் தேதி திரும்ப இருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். ஆகவே, அதனை தொடர்ந்து தான் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

'லிங்கா' நஷ்டக் கணக்குகளைப் பார்த்த ரஜினி, தயாரிப்பாளரிடம் இருந்து வியாபார ரீதியாக உரிமம் 'கை' மாறி மாறி வெளியானதால் இந்த நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தனது ஆதங்கத்தை சற்றே ஆவேசத்துடன் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் வெளிப்படுத்தி இருக்கிறார்.