↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தனியார் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்வதற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜி.அலெக்ஸ் பென்சீகர், ஏ.ஆரோக்கியதாஸ் உள்பட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாசமான நடனங்கள், தரக்குறைவான, வன்முறை அதிகம் நிறைந்த நிகழ்ச்சிகள் அதிகமாக ஒளிபரப்பப்படுகின்றன.

இதில், குறிப்பாக பெண்கள், குழந்தைகளைப் பாதிக்கும் விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி, தணிக்கை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.


இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் முன் தணிக்கை செய்யப்படுவதில்லை. இருந்தாலும், கேபிள் டிவி நெட்வொர்க் சட்டம் 1995-ன் படி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விதிமுறைகள் மீறப்பட்டால் தானாகவோ அல்லது புகார் ஏதேனும் அளிக்கப்பட்டாலோ, இந்த சட்டப் பிரிவு 20-ன் படி செய்தி, ஒலிபரப்புத் துறை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறது. திரைப்படத்துக்குச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, சினிமாச் சட்டம் 1952-இல் சில வழிமுறைகளை அரசு வெளியிட்டது. இதே போன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்காணிப்பதற்கு எலக்ட்ரானிக் மீடியா கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தை இயற்றுமாறு அரசுக்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்த போதிலும், இது தகவல் தொழில்நுட்பக் காலம். இதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது என்பது முடியாது ஒன்று. இந்த அனைத்து விஷயங்களும் சமூகப் பிரச்னைகளுடன் தொடர்புடையது. இது தொடர்பாக சட்டங்கள் தேவையா? இல்லையா? என்பது அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முடிவு செய்ய வேண்டியது. எனவே, மனு முடித்து வைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top