↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மேற்கு வங்க மாநிலத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட கங்னாப்பூரில் இயேசு சபைக்கு சொந்தமான கான்வென்ட் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சனிக்கிழமையன்று காலையில் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 8 பேர், அங்கிருந்த 71 வயது மூத்த கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்தனர். பின்னர் பள்ளி பீரோவில் இருந்த சுமார் ரூ.12 லட்சம் பணம் மற்றும் பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு தப்பியோடினர்.

பலாத்காரத்திற்கு ஆளான கன்னியாஸ்திரி, ரானாகட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த சமூக விரோத சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, எந்த மத அமைப்புகளையும் இதுபோல யாரும் இழிவுபடுத்தக்கூடாது என கேட்டுக்கொண்டார். கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று கூறிய அவர், பொதுமக்களும் இதற்கு உதவி செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். 


முன்னதாக பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், அதில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசும் போலீசாரால் அறிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடத்திய தொடர் தேடுதல் வேட்டையின் பலனாக 8 பேர் ஞாயிறன்று போலீசில் சிக்கினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளை தேடும் பணி மேலும் தொடர்ந்து வருகிறது.

கிறிஸ்துவ அமைப்பு கண்டனம் 

இதற்கிடையே கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவத்துக்கு மாநில ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செயல் தலைவர் ஹெராடு மல்லிக் கூறும்போது, ‘இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் நோக்கம் வெறும் கொள்ளை மட்டுமல்ல. சிறுபான்மை சமூகத்தின் மீது தாக்குதல் நடத்துவதும் தான்' என்றார். 

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் அதிகரித்து வருவதாக கூறிய மல்லிக், பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் வந்ததாகவும், எனவே அவர் போலீஸ் பாதுகாப்பை கேட்டிருந்ததாகவும் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top