↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அயர்லாந்துக்கு எதிரான நாளைய போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி புது வரலாறு படைக்க வாய்ப்புள்ளது. உலக கோப்பையில் நாளை இந்தியா-அயர்லாந்து அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு ஹாமில்டனில் இப்போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்கு அது ஒரு மைல் கல்லாகும்.

உலக கோப்பை பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இதுவரை தான் சந்தித்த பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, யு.ஏ.இ, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணியின் பந்து வீச்சு பிற எந்த ஒரு நாட்டைவிடவும் மிகவும் வலுவாக உள்ளது. ஏனெனில், 400 ரன்கள் என்பதே சாதாரணமாக போய்விட்ட, இந்த உலக கோப்பை தொடரில், இதுவரை இந்தியாவுக்கு எதிராக மோதிய எந்த நாடுமே 250 ரன்களை கூட எட்ட முடியவில்லை. புவனேஸ்வர் குமார் யு.ஏ.இ அணிக்கு எதிராக எடுத்த ஒரு விக்கெட்டை கழித்துவிட்டு பார்த்தால், அணியில் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் ஆடி வரும் மற்ற 5 பவுலர்களும் இணைந்து 36 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

அஸ்வின் மற்றும் முகமது ஷமி தலா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியான் முன்னணி பவுலர்களாக மிளிர்கிறார்கள். உமேஷ் யாதவ், மோகித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


இந்திய பந்து வீச்சாளர்களில் மிக அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தவர் ரவீந்திர ஜடேஜாதான். ஆனால், அவரது எக்கனாமி ரேட் எவ்வளவு தெரியுமா? வெறும், 4.51 மட்டுமே. பவுலிங்கில் பெயர் பெற்ற நாட்டு முன்னணி பந்து வீச்சாளர்களே, எக்கனாமி ரேட்டை 6 அல்லது 5 என வைத்திருக்கும்போது, பகுதி நேர ஸ்பின்னரான ஜடேஜா இவ்வளவு குறைவான எக்கனாமி ரேட் வைத்துள்ளது வியப்புதான். அதைவிட வியப்பு, இதைவிட இந்தியாவின் மற்ற பவுலர்கள் மிகவும் சிக்கனமாக ரன் கொடுத்துள்ளனர் என்பதுதான்.

ரன்களை வழங்கும் வள்ளல் என்று விமர்சிக்கப்படும், உமேஷ் யாதவ் கூட இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது எக்கனாமி ரேட் 4.33 ஆக உள்ளது. முகமது ஷமியின் எக்கனாமி ரேட் 4 மட்டுமே. 25 ஓவர்கள் வீசி, 100 ரன்கள் மட்டுமே இவர் விட்டுக் கொடுத்துள்ளார். அத்துடன் 9 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

அஸ்வினின் ஆப் ஸ்பின் மற்றும் கேரம் வகை பந்துகளை கணிக்க பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இதனாலேயே அவரது எக்கனாமி ரேட், வெறும் 3.91ஆக உள்ளது.

ஆனால், இந்திய பந்து வீச்சாளர்களிலேயே மிகவும் சிக்கனமானவர் மோகித் ஷர்மாதான். மோகித், வெறும் 3.90 என்ற எக்கனாமி ரேட்தான் வைத்துள்ளார். சென்னை பையன் அஸ்வினுக்கும், ஹரியானாவின் மோகித்துக்கும் கஞ்ச பிசினாரிகள் என்று செல்லப் பெயர் வைத்துள்ளனர் இந்திய அணி சக வீரர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிறிய மைதானமான ஹாமில்டனின், பவுண்டரி எல்லை மிஞ்சிப் போனால், 60 மீட்டர்தான் இருக்கும். இதை நமது பேட்ஸ்மேன்கள் நன்றாக பயன்படுத்தி விளாசித் தள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவின் டாப் பேட்ஸ்மேன்கள் அனைவருமே, ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பான முத்திரையை பதித்து, தங்களது தன்னம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். எனவே வீக் பவுலிங் டீமான அயர்லாந்துக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் பொங்கி எழுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுசரி... அயர்லாந்தை வீழ்த்தி, இந்தியா புது சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக முதலில் தெரிவித்தோமே, அது என்னவென்று சொல்ல வேண்டாமா? நாளைய போட்டியில் இந்தியா வென்றால், உலக கோப்பை தொடர்களில் தொடர்ந்து 9 போட்டிகளில் வென்ற சாதனையை படைக்க முடியும். இந்தியா இதுவரை உலக கோப்பைகளில் 9 போட்டிகளை தொடர்ந்து வென்றது கிடையாது. ஆனால் 2011 உலக கோப்பையின்போது, சென்னையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றிக்கு பிறகு, இந்த உலக கோப்பையின் முதல் 4 போட்டிகளில் வெற்றி வெற்றிகளையும் சேர்த்தால், இந்தியா தொடர்ந்து 8 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.

2003ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையில், சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 8 போட்டிகளில் வென்றிருந்த சாதனையை, டோணி தலைமையிலான தற்போதைய அணி சமன் செய்துள்ளது. நாளை அயர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றால், அது இந்தியாவின் தொடர்ச்சியான 9வது வெற்றியாக அமையும். இப்போது தெரிகிறதா, இந்த போட்டி ஏன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புது மைல் கல்லாக மாறப்போகிறது என்று..?

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top