↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

குடிபோதையில் வன விலங்கு பூங்காவில் சிங்கத்தின் இருப்பிடத்திற்குள் குதித்த இளைஞர் ஒருவரை, அங்கிருந்த ஊழியர்கள் சாதுர்யமாக உயிரோடு மீட்ட சம்பவம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. பெரும்பாலான ‘குடி' மகன்களுக்கு குடித்தால் மட்டும் வீரம் எங்கிருந்து தான் வருமோ. வானத்தை வில்லாக்குவேன், மலையை மடுவாக்குவேன், தயிரைப் பாலாக்குவேன்.. பாலை பாழாக்குவேன் என்று அடித்து விடுவார்கள். ஆனால், போதை தெளிந்ததும், ‘அது நாற வாய்... இது வேற வாய்' என வடிவேலு மாதிரி பம்மிப் போய் சாந்தமாக இருப்பார்கள். 

இப்படியாக அதிக மது குடித்ததால் தன் சுய நிதானத்தை இழந்த அகமதாபாத் இளைஞர் ஒருவர், அங்கிருந்த வனவிலங்கு பூங்கா ஒன்றில் சிங்கத்தின் இருப்பிடத்திற்குள் குதித்து அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளார். இத்தனைக்கும் இவருக்கு வயது 17தான். அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ராகுல் குமார். நேற்று இவர் மது போதையால் நிதானம் இழந்த நிலையில், அங்கிருந்த கமலா வன உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார். 

சிங்கத்தின் இருப்பிடப் பகுதிக்குச் சென்ற ராகுல், யாரும் எதிர்பார்க்காத நிலையில், ‘நான் இன்று ஒரு சிங்கத்தைக் கொல்லப் போகிறேன்' என வீரவசனம் பேசிக் கொண்டே உள்ளே குதித்துள்ளார். ராகுல் உள்ளே குதித்ததைக் கண்டு பார்வையாளர்கள் மற்றும் அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து சாதுர்யமாக செயல்பட்ட பூங்கா ஊழியர்கள் ராகுலை உயிருடன் மீட்டனர். 

ராகுல் உள்ளே குதித்த வேளையில் சிங்கங்கள் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், மேலும், அவர் அங்கிருந்த அகழி ஒன்றில் விழுந்ததால், சிங்கங்கள் நெருங்குவதற்குள் அவரைக் காப்பாற்றி விட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். போதை தெளிந்தவுடன் பேசிய ராகுல் கூறுகையில், நான் என்ன செய்தேன் என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. நான் குடித்திருந்தேன். அப்போது எனக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டதாக கருதினேன் என்றார். காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘அந்த இளைஞருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது' என்றார். மேலும், ராகுலை உளவியல் ரீதியான சிகிச்சைக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கடந்தாண்டு டெல்லி உயிரியல் பூங்காவில் புலியின் இருப்பிடத்திற்குள் தவறி விழுந்த மாணவர் ஒருவரை புலி கடித்துக் கொன்றது. அதேபோல், சமீபத்தில் பெங்களூருவில் உணவளிக்கச் சென்ற பூங்கா ஊழியர் சிங்கங்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில், சிங்கத்தின் இருப்பிடத்திற்குள் இளைஞர் ஒருவர் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top