↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவான ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கினார். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. 

அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் செலவுகளுக்காக மீடியா ஒன் நிறுவனம் எக்சிம் வங்கியிடம் ரூ.20 கோடி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்காக பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள சொத்து ஆவணங்களை ரஜினி மனைவி லதா உத்தரவாதமாக கொடுத்தார். 

கோச்சடையான் படம் வெளியான பிறகு மீடியா ஒன் பட நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடனுக்கு உத்தரவாதமாக கொடுக்கப்பட்ட லதா ரஜினியின் சொத்துக்களை கைப்பற்றுவதாக வங்கி அறிவித்தது. 

இதையடுத்து மீடியா ஒன் நிறுவனம் எக்சிம் வங்கியின் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், மீடியா ஒன் நிறுவனத்தின் தலைவரான முரளி மனோகர் இன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பத்திரிகையாளரை சந்தித்து இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளித்தார். 

அப்போது அவர் கூறும்போது, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை நாங்கள் 10 ஆண்டு காலமாக நடத்தி வருகிறோம். இந்நிறுவனம் சார்பாக சில படங்களை தயாரித்தும், சில படங்களை விநியோகித்தும் வருகிறோம். 

எங்களுக்கு இந்திய கலாச்சார படங்களை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசை நீண்டநாளாக இருந்து வந்தது. அந்த நிலையில்தான் ரஜினி நடிப்பில் தயாராகி வந்த கோச்சடையான் படத்தை தயாரிக்க முன்வந்தோம். 

மற்ற தமிழ்ப்படங்களைப் போல் அல்லாமல், இப்படம் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தின் உதவியாலேயே நடந்ததால, இப்படம் வெளிவருவதில் சில காலதாமதங்கள் ஏற்பட்டது. அந்த நிலையில் எங்களுக்கு பண நெருக்கடியும் உருவானது. 

அப்போது எங்களுக்கு லதா ரஜினிகாந்த் அவர்கள் உதவ முன்வந்தார்கள். அவர்கள் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை வங்கியில் வைத்து, கடன் வாங்கி இந்த படத்தை எடுத்தோம். 

ஆனால், குறிப்பிட்ட தேதியில் அந்த கடனை வங்கியில் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வங்கி நிர்வாகம் சொத்தை கைப்பற்றப் போவதாக அறிவித்தது. எனினும், அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். முழுமையாக கடனை செலுத்தி எங்களுக்கு உதவிய லதா ரஜினிகாந்த் அவர்களின் சொத்து ஆவணங்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைப்போம் என்றார்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top