↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ராஹா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்தார். ஜெயலலிதா தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகி வருகிறார்.

பவானி சிங் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர் அரசு வழக்கறிஞராக ஆஜராக அனுமதிக்கக் கூடாது என்றும் கூறி திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு நீதிபதிகள் எம்.பி.லோக்கூர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் கடந்த 15ம் தேதி தீர்ப்பு வழங்கினர். அதில், பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததில் தவறு இல்லை என்று பானுமதியும், பவானி சிங் நியமனம் தவறு என்று லோக்கூரும் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கை 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற அவர்கள் தலைமை நீதிபதி எச்.எல். தத்துவுக்கு பரிந்துரைத்தனர். அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால் மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் கடந்த 21ம் தேதி கூறுகையில், பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது சரியல்ல. எனினும், இந்த வழக்கில் மறுவிசாரணை தேவையில்லை. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு ஏப்ரல் 27ம் தேதி வழங்கப்படும் என்றனர். அதன்படி இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top