↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்தில் நடிகர் விஜய், 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து, பரபரப்பாக வசனம் பேச, அதற்கு எதிராக தி.மு.க., தரப்பில் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அரசியல் கடந்தும், இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கடும் எதிர்ப்பு : தீபாவளிக்கு, நடிகர் விஜய் நடித்து, கத்தி படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை, லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. அந்த நிறுவனம் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர், சுபாஷ் கரண் என்பவருக்கு சொந்தமானது. அவர், இலங்கை அதிபர் ராஜபக் ஷேவின் மகனுக்கு, நெருக்கமான நண்பர் என்பதால், அந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட, இங்கிருக்கும் தமிழ் அமைப்புகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தும், படம் ரிலீஸ் ஆகி விட்டது. படத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான எந்த காட்சி அமைப்புகளும் படத்தில் இல்லை. ஆனால், 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, நடிகர் விஜய், க்ளைமாக்ஸ் காட்சிகளில் பரபரப்பாக வசனம் பேசுவது போல, காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.
2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை, மக்கள் புறக்கணிப்பர் என, பரபரப்பான வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது தி.மு.க., தரப்பை, ரொம்பவும் உஷ்ணப்படுத்தியிருக்கிறது. இந்தத் தகவலை, கட்சியின் முக்கியத் தலைவருக்கு, இரண்டாம் கட்டத் தலைவர்கள் கொண்டு சென்றனர். அப்போது, படத்தில் இடம் பெறும், மொத்த காட்சி அமைப்புகள் குறித்து கேட்டறிந்த அந்த தலைவர், இப்போதைக்கு, இந்த விவகாரம் குறித்து எதுவுமே பேச வேண்டாம். நடிகர் விஜய் குறித்து, மொத்த விவரங்களை திரட்டுங்கள். விரைவிலேயே, அவர் எதிலாவது சிக்குவார். அப்போது, பார்த்துக் கொள்ளலாம் என, சொல்லியிருக்கிறார்.

சலசலப்பு : இதற்கிடையில், இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என்றதும், படத்தை ரிலீஸ் செய்ய, யாரும் தடை ஏற்படுத்தக் கூடாது என்று, தன் இணைய பக்கத்தில் கருத்து சொல்லி, சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு, வேண்டுகோள் விடுத்திருந்தார், தென்சென்னை மாவட்ட தி.மு.க., செயலர் ஜெ.அன்பழகன். அதுகுறித்தும், தி.மு.க.,வில் சலசலப்பு கிளம்பி இருக்கிறது. கத்தி படத்தில் வரும், இந்த 2ஜி வசன சர்ச்சை குறித்து, காட்சிப் பிழை சினிமா இதழ் ஆசிரியர், சுபகுணராஜன் கூறியதாவது: வர்த்தக ரீதியான சினிமாவில், ஊழலுக்கு எதிரான கருத்துக்களை சொல்வது, ஒரு நடைமுறை. இப்படி சொல்லப்படும் கருத்து, பாரபட்சமின்றி இருக்க வேண்டும். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இது போன்ற படங்களை எடுத்து வருபவர். மேலும், பிரபலமான கதாநாயகன் மூலம், ஊழலுக்கு எதிரான கருத்துக்களை சொன்னால், மக்களிடம் எடுபடும் என்பதால், இந்த முறையை கையாண்டு வருகிறார். ஆனால், முருகதாசின் இந்த அணுகுமுறை, ஒரு சார்பாக உள்ளது. அவரது கருத்தை சொல்லும் கதாநாயகனும், அவரது அரசியல் லாபத்துக்காக, அதை பயன்படுத்திக் கொள்கிறார். கத்தி படத்தில் வரும், 2ஜி தொடர்பான வசனங்களும் இந்த வகைதான்.

அடாவடித்தனமான அரசியல் : ஜனநாயக முறையில், கருத்தை வெளியிட சுதந்திரம் இருந்தாலும், அதை சரியாக பயன்படுத்துவதில்லை. சினிமாவில் வரும் இப்படிப்பட்ட கருத்துக்கு, அதிகாரமட்டத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பினால், அடி பணிந்தும் விடுகின்றனர். இந்த அடாவடித்தனமான அரசியலுக்கு, கத்தி பட வசனம், ஒரு சான்று.

எழுத்தாளர் பாமரன் கூறியதாவது: சினிமாவில் மட்டும் மக்கள் பிரச்னையை பேசிவிட்டு, நிஜவாழ்க்கையில் அதை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது தான், இன்றைய தமிழ் சினிமாவாக இருக்கிறது. எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்கள், சினிமாவில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் அரசுக்கு எதிராக, மக்கள் பிரச்னைகளுக்கு போராட்டங்கள் நடத்தியவர்கள். ரசிகனின் பணப்பையை குறிவைத்து, சினிமா எடுக்காமல், உண்மையான சமூக அக்கறையோடு, இவர்கள் இருந்தனர். ஆனால், இன்றைய கதாநாயகர்களும், இயக்குனர்களும் கோகோ கோலா விளம்பரங்களில் நடித்து, பணம் சம்பாதித்து விட்டு, சினிமாவில், கோகோ கோலாவிற்கு எதிராக, பஞ்ச் டயலாக் பேசுகின்றனர்.

தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஒருதலைபட்சமாக... 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து, வசனம் பேசும் நடிகர் விஜய், சொத்து குவிப்பு வழக்கு குறித்தும், தைரியமாக வசனம் பேசியிருந்தால், அவரது நேர்மையை, சமூகத்தின் மீதான அக்கறையாக வரவேற்கலாம். ஒருதலைபட்சமாக, ஏன் வசனம் பேச வேண்டும். அதுமட்டுமல்ல, தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளி, தண்ணீருக்கு பிரச்னை ஏற்படுத்தியது குறித்தும், படத்தில் வசனங்களும் காட்சி அமைப்புகளும் இருப்பதாக அறிகிறோம். இதே தாமிரபரணி ஆற்றில் இருந்து தான், தண்ணீரை கோகோ கோலா நிறுவனம் எடுத்தது. அந்த நிறுவனத்துக்கு தான், பிராண்ட் அம்பாசிடராக இருந்து, விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தார், விஜய்.

நியாயமில்லாத செயல் : இப்போது, அவரே அந்நிறுவனத்துக்கு எதிராக படங்களில் வசனம் பேசுகிறார். இதுதான், நடிகர் விஜயின் சமூக அக்கறை. இப்படிப்பட்ட காட்சிகளை படமாக்கி இருக்கும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், அவர் விருப்பப்படி படமெடுப்பது குறித்தோ, வசனங்களை அமைப்பது குறித்தோ, நாங்கள் கேள்வி கேட்க வரவில்லை. ஆனால், அவர் தனக்கு எத்தனை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. அதில் கருப்பு எவ்வளவு; வெள்ளை எவ்வளவு என, வெளிப்படையாக சொல்வாரா? அவர்கள் மட்டும் அரசாங்கத்துக்கும், சமூகத்துக்கும் எதிராக, சொந்த வாழ்க்கையில் எல்லா காரியங்களையும் செய்வதும், படங்களில் மட்டும் அரசியல்வாதிகளை மட்டும், சமூகத்துக்கு எதிரானவர்களாக சித்தரிப்பதுமாக இருப்பது தான், நியாயமில்லாத செயல். இவ்வாறு, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top