↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை- பஞ்சாப் அணிகள் மோதிய 7-வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணியைச் சேர்ந்த சேவாக்- முரளி விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக ஆடி வேகமாக ரன் குவித்தனர். இதனால் 5.2 ஓவரில் பஞ்சாப் அணி 50 ரன்னைக் கடந்தது.

7வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் சேவாக் அவுட் ஆனார். அவர் 19 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன் விளாசினார். அடுத்து அதிரடி வீரர் மேக்ஸ்வெல் களம் இறங்கினார். இவர் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய விஜய் 29 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இருப்பினும், 4வது விக்கெட்டுக்கு கேப்டன் பெய்லி, மில்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடி பின்னர் அதிரடி காட்டியது. மில்லர் அதிரடியாக விளையாடிய நிலையில், மலிங்காவின் ஸ்லோ பந்தில் 24 ரன்களுடன் வெளியேற்றப்பட்டார். ரிஷி தவான் 6 ரன்னில் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் மலிங்காவே வீழ்த்தினார். அடுத்து ஜான்சன் களம் இறங்கினார்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் பெய்லி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் 27 பந்தில் 50 ரன் அடித்தார். அதில் 3 சிக்சர், இரண்டு பவுண்டரி அடங்கும். தொடர்ந்து விளையாடிய அவர் பெய்லி 32 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. பின்னர் 177 ரன்களை இலக்காக கொண்டு தனது பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் சந்திப் சர்மா பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து பஞ்சாப் பவுலர்கள் ஆதிக்கம் தொடங்கியது.

மும்பை அணியின் விக்கெட்டுகள் சரிய தொடங்கின. ராயுடு 13, பின்ஞ் 8, போலார்ட் 20 ரன் என முக்கிய வீரர்கள் அனைவரும் அவுட்டாகி மைதானத்தில் குவிந்திருந்த மும்பை ரசிகர்களை ஏமாற்றினார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், களத்தில் இறங்கியது முதலே, ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணியின் பந்துகளை எல்லை கோட்டுக்கு அனுப்பியபடி இருந்தார். இதனால் சோர்ந்து போயிருந்த ரசிகர்களின் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி ஆரவாரம் எட்டிப்பார்த்தது. ஹர்பஜன் சிங் 19 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இது தான் மும்பை அணி வீரரின் ஒருவரின் வேகமான அரைசதமாகும்.

மும்பை வெற்றி பெற கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்படும் பரபரப்பான சூழ்நிலை உருவானது. ஆனால் அந்த ஒவரில் 12 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது மும்பை. ஹர்பஜன் சிங் 24 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அந்த ஒவரின் 5வது பந்தில் ஆட்டம் இழந்தார். 32 பந்தில் 64 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணியின் கேப்டன் பெய்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக ஹர்பஜன் 4 ஓவர்கள் பந்து வீசி 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து. 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, நேற்றைய போட்டியில் ஆல்-ரவுண்டராக ஜொலித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top