மீண்டும் வழக்கு தொடர்ந்த ‘லிங்கா’ பீவர் எக்குத்தப்பாக எகிறிக் கொண்டிருக்கும் வேளையில் மேலும் பரபரப்பூட்டும் செயல்களும் நடந்து வருகின்றன.
இரு நாட்களுக்கு முன்புதான் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ‘லிங்கா’ படத்தின் கதை தன்னுடையது என்று ரவிரத்தினம் என்ற சினிமா இயக்குநர் தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்போது அடுத்த வழக்கு சென்னையில்..!
சென்னை வடபழனியை சேர்ந்தவர் பி.சக்திவேல். சென்னை 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “நான் சென்னை லயோலா கல்லூரியில் 2009-ம் ஆண்டு எம்.ஏ. விஷ¨வல் கம்யூனிகேசன் பட்டம் பெற்றேன். சினிமா மீதுள்ள ஆர்வத்தினால், படிக்கின்றபோதே, பிரபல சினிமா கதை ஆசிரியர் பி.என்.சி. கிருஷ்ணாவிடம் உதவியாளராகப் பணியாற்றினேன்.
இந்த நிலையில், முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘உயிர் அணை’ என்ற தலைப்பில் திரைக்கதை எழுதினேன். இந்த தலைப்பை, 2012-ம் ஆண்டு சினிமா மற்றும் டிவி தொடர் தயாரிப்பாளர் சங்கமான கில்டில் பதிவு செய்தேன்.
பின்னர், இந்த கதையை பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரிடம் கூறினேன். கதை கேட்ட அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால், திரைக்கதையை படமாக எடுக்க பெரும் தொகை செலவாகும் என்பதால், அதை தயாரிக்க முன் வரவில்லை.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 19-ம் தேதி என்னுடைய கதையை தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கத்திலும் பதிவு செய்தேன்.
இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ என்ற தலைப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ், சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வீன் இருவரும் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், லிங்கா படத்தின் கதை முல்லை பெரியாறு அணை மற்றும் பென்னி குவிக் தொடர்பானது என்று தெரிய வந்தது. இந்த செய்தி, கடந்த நவம்பர் 20-ம் தேதி பத்திரிகைகளில் விரிவான செய்தியாக வெளியாகியுள்ளது.
இந்த லிங்கா படத்தின் கதை என்னுடைய கதையாகும். என்னுடைய ‘உயிர் அணை’ என்ற தலைப்பிலான கதையைத்தான் ‘லிங்கா’ என்ற பெயரில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள ‘லிங்கா’ திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது. எனவே, என்னுடைய கதையை கொண்ட ‘லிங்கா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்…” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி ‘லிங்கா’ படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கதை ஆசிரியர் பொன்குமார், தயாரிப்பாளர் வெங்கடேசன், சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வீன் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 9-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.