அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தை ஜனவரி 29-ம் தேதி அன்று ரிலீஸ் செய்வதற்காக தீவிர முயற்சிகள் நடக்கின்றன.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'என்னை அறிந்தால்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
'என்னை அறிந்தால்' படத்தின் சென்சார் இம்மாதம் 21-ம் தேதி நடைபெறும் என்றும், 29-ம் தேதி படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஏ.ஏம்.ரத்னம் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

ஆனால், இன்று ' என்னை அறிந்தால்' படம் சென்சாருக்கு அனுப்பப்படவில்லை என்றும், படம் பிப்ரவரி முதல் வாரத்தில் ரிலீஸ் என்றும் திரையுலகில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், உண்மை நிலையை அறிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் பேசினோம். '' ஜனவரி 22 வியாழன் அன்று 'என்னை அறிந்தால் ' படம் சென்சாருக்கு அனுப்பப்படுகிறது. ஜனவரி 29-ம் தேதி அன்று 'என்னை அறிந்தால் 'படம் வெளியாவதற்கான தீவிர முயற்சிகள் நடக்கின்றன'' என்று தெரிவித்தார்.