↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாகிஸ்தானின் முன்னணி சூப்பர் மாடலான அயன் அலி அளவுக்கு அதிகமான பணத்துடன் நாட்டை விட்டு கிளம்ப முயன்றபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அயன் அலி. அந்நாட்டின் முன்னணி சூப்பர் மாடல். 24 வயதாகும் அவர் செல்போன் முதல் ஐஸ் க்ரீம் வரை பலதரபட்ட பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்துவிட்டார். அண்மை காலமாக பாகிஸ்தானில் நடக்கும் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் அவர் தான் முக்கிய மாடலாக உள்ளார்.

16 வயதில் மாடலிங் செய்யத் துவங்கிய அவர் விரைவிலேயே பாகிஸ்தானின் முன்னணி மாடலாக ஆனார். பிரபஞ்ச அழகிப் போட்டியில் பாகிஸ்தான் சார்பில் அயன் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி அவர் தனது கைப்பையில் ரூ.3 கோடியே 11 லட்சத்துடன் இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். விமானத்தில் ஏறும் முன்பு பயணிகளின் உடைமைகள் சோதிக்கப்பட்டபோது அயனிடம் அதிகமான அளவில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டுக்கு ரூ.6.22 லட்சம் ரொக்கம் எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது.

விதிமுறைகளை மீறி அயன் பணத்தை கடத்துவதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்தனர். ராவல்பிண்டியில் உள்ள பிரதான சிறையான ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு எந்த ஒரு சலுகையும் அளிக்கப்படவில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.6.22 லட்சம் தான் எடுத்துச் செல்ல அனுமதி இருப்பது தனக்கு தெரியாது என்று அயன் தெரிவித்துள்ளார். அயன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுவதுடன் 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top