பன்னிரெண்டாயிரம் டிவிட்டர் வாசிகளின் வாக்குகளைப் பெற்று ‘இந்திப் பட உலகில் குயின்’ என்று டிசம்பர் முதல்நாளில் கொண்டாடப்பட்டார் பிரியங்கா சோப்ரா. தற்போது இரண்டாவது முறையாக ஆசியாவின் கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துத் தனது அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

முப்பத்திரெண்டு வயதாகும் பிரியங்கா சோப்ரா கடந்த 2000-வது ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர். தமிழில் விஜயுடன் ‘தமிழன்’ என்ற படத்தில் துள்ளலாக ஆடியபடியே அறிமுகமானவரை அதன்பிறகு பாலிவுட் ஆரத்தழுவி அணைத்துக்கொண்டது. பிரியங்கா சோப்ராவுக்குக் கிடைத்த அளவுக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் இந்திப் பட உலகில் வேறு எந்தக் கதாநாயகிக்கும் கிடைக்கவில்லை என்றே கூறிவிடலாம். அதேபோல் அவருக்குக் கிடைத்த தனித்துவமான கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்த அவர் கடுமையாக உழைத்தார்.

‘பார்பி’ படத்தில் ஒரு ஆட்டிஸம் பெண்ணின் காதலை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்திய பாணியும், ‘மேரி கோம்’ படத்துக்காக பாக்ஸிங் வீராங்கனையாக மாறிக்காட்டிய அவரது உழைப்பும் சமீப காலங்களில் அவரது உயரத்தைப் பளிச்சென்று அடையாளம் காட்டியது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கால்பந்து லீக் போட்டியின் தொடக்க விழாவில் ‘லைவ்’வாக ஐந்து நிமிடங்கள் ஆடி, மைதானத்தை ஓடியபடியே வலம் வந்து, ஓய்வெடுக்காமல் நிகழ்சியை அவர் தொகுத்து வழங்கியதைப் பார்த்து அவரது ரசிர்கள் வியந்துபோனார்கள்.

இத்தனை வியப்புக்குரிய பிரியங்கா சோப்ராவுக்கு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள், சமூக வலைதள வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுத்த ஆசியாவின் கவர்ச்சிகரமான 50 பெண்களில் பட்டியலில் மீண்டும் முதலிடம் கொடுத்திருக்கிறார்கள்.
புகழ்பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரமான தர்சிதி டாமி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். மற்றொரு தொலைக்காட்சி நட்சத்திரமான சானியா இரானி மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டார். காத்ரீனா கையூப்புக்கு இந்த முறை நான்காவது இடம். தீபிகா படுகோனே 6-வது இடத்தையும், சோனம் கபூர் 9-வது இடத்தையும் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு 16-வது இடத்தையும், பிரினீதி சோப்ரா 18-வது இடத்தையும், ராணி முகர்ஜி 22-வது இடத்தையும், இஷா குத்த்ரா 23-வது இடத்தையும் கொடுத்திருக்கிறார்கள் இணையவாசிகள்.

வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்தது பற்றி பிரியங்கா சோப்ராவிடம் கேட்டபோது, “கவர்ச்சி என்ன பெரிய கவர்ச்சி? உங்களுக்கு என்ன சிறப்பாகத் தோன்றுகிறதோ அதை நீங்கள் செய்யுங்கள். ஆனாலும் நான் இந்தத் தகுதியை அடைய என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் மகிழ்ச்சியாக இந்தச் சிறப்பை ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் உண்மையாக வாக்களித்துத் தேர்வுசெய்திருக்கிறார்கள். இது எனக்கு இன்னும் சிறப்பு செய்கிறது” என்று அலட்டல் இல்லாமல் பதில் கூறியிருக்கிறார். அடக்கத்துடன் இப்படிச் சொன்னாலும் அவரது தோற்றம் சார்ந்த அவரது வசீகரம் ரசிகர்களை அவர்பால் சுண்டியிழுப்பதை மறுக்க முடியாது.

நடிப்பால் கவர்வது போதாதென்று தற்போது கவர்ச்சி நடனம் ஆடியும் தனது ரசிகர்களைக் கட்டிவைத்திருக்கிறார். ‘ராம் லீலா’ படத்தில் ‘ராம் ஜாகி லீலா’ என்ற பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டத்தையும் ‘ஜாஞ்சீர்’ படத்தில் ‘பிங்கி ஹாய் பைசா’ என்ற பாடலுக்கு ஆடிய ஆட்டத்தையும் ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.