↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வசந்தகுமாரன் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு தான் வெறும் ரூ.9 லட்சம் மட்டுமே அட்வான்ஸ் வாங்கியதாகவும், ஆனால் அந்த படத்தில் எதிர்பாராத காரணமாக நடிக்க முடியாததால் வாங்கிய பணத்தை வட்டியுடன் கொடுக்க முன்வந்ததாகவும் ஆனால் அந்த் படத்தின் தயாரிப்பாளர்கள் தன்னிடம் பல கோடி கேட்டு மிரட்டுவதாகவும் நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை ஒன்றில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழ் திரையுலக பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ் திரை உலகிற்கும் எனக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக்கம்.

ஆர்.கே.சுரேசின் ஸ்டுடியோ 9 என்ற நிறுவனத்தில் ‘‘வசந்தகுமாரன்’’ என்ற திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே. ஆனால் ஆர்.கே.சுரேசின் தவறுதலான நடவடிக்கைளின் காரணமாகவும் அவரின் தகாத வார்த்தைகளின் காரணமாகவும் நான் வசந்தகுமாரன் திரைப்படத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே விலகி கொள்வதாகவும் நான் வாங்கிய ரூ. 9 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து தருவதாகவும் அன்றே கூறி விட்டேன்.

ஆனால் ஆர்.கே.சுரேஷ் என்னிடம் பல கோடி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும் சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்து கொண்டு இருந்தன. இதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் அளித்தேன்.

அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தபோது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வசந்தகுமாரன் திரைப்படத்தில் இருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் மீண்டும் ஒரு புகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளேன்.

இந்நிலையில் இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில் நான் நடிப்பதாக வசந்தகுமாரன் திரைப்படத்தின் விளம்பரம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இது போன்ற செயல்கள் எனது வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன். நான் தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘‘புறம்போக்கு’’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் ‘‘நானும் ரவுடிதான்’’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன்.

இந்நிலையில் வசந்தகுமாரன் திரைப்படம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

இது போன்ற செயல்களில் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர் மீது சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பிரச்சினையில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி அதில் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top