↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிய வரும். பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர தனிநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் தங்கள் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவர்களுடைய ஜாமீன் மனுக்களை நீதிபதி சந்திரசேகரா கடந்த 7-ந் தேதி நிராகரித்தார். குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று அரசு தரப்பில் விரும்பினாலும் ஊழலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனுவையும், ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதால் ஜெயலலிதா சார்பில் 9-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜெயலலிதாவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் கடந்த திங்கட்கிழமை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜராகி ஜெயலலிதாவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜராகி, அவர்களுடைய ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணைக்கான வேண்டுகோளை முன்வைத்தார். இந்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று விசாரணைக்கு தேதி குறித்து உத்தரவு பிறப்பித்தனர். இதன்படி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 40வது வழக்காக இன்று வருகிறது. நீதிபதிகள் விக்ரம்ஜித்சென், பிரபுல்லசந்திரபந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அரசுத் தரப்பு வழக்கறிஞராக முன்னுக்குப் பின் முரணாக பேசி வரும் பவானி சிங் நீடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான தேமுதிகவைச் சேர்ந்த ஜி.எஸ். மணியும் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும் தம் பங்குக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தானும் இந்த வழக்கின் ஒரு அங்கம்.. அதனால் என்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று சுவாமி மனுவில் கூறியுள்ளார். இன்னும் சில மணி நேரத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா என்பது தெரிந்துவிடும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top